குர்பானி இறைச்சியை எவ்வாறு பங்கு பிரிப்பது?

குர்பானி இறைச்சியை சமமாக மூன்று பங்குகளாகப் பிரிக்க வேண்டும் எனவும், அதில் ஒரு பகுதியை தமக்காக வைத்துக்கொண்டு, இரண்டாவது பகுதியை உறவினர்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டு முன்றாவது பகுதியை ஏழைகளுக்கு தர்மம் செய்ய வேண்டும் என்ற பொதுவான கருத்து பல முஸ்லிம்களிடம் காணப்படுகின்றது.இதை நடைமுறைப்படுத்தியும் வருகின்றனர். இதற்கு குர்ஆனிலோ அல்லது சுன்னாவிலோ எவ்வித ஆதாரமும் இல்லை!

நமக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டு மீதியை உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் பகிர்நதளிக்கலாம். இதில் வரையறை இல்லையெனினும் குர்பானி இறைச்சியில் உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் பங்கிருப்பதை திருமறையும் நபிமொழிகளும் தெளிவுபடுத்துவதால் முழு இறைச்சியையும் குர்பானி கொடுப்பவரே வைத்துக்கொள்ளாமல் உறவுகளுக்கும் ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு தாமும் வைத்துக் கொள்ளலாம்.

அல்லாஹ் கூறுகின்றான்:

“இன்னும் (குர்பானிக்கான) ஒட்டகங்கள்; அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது; எனவே (அவை உரிய முறையில்) நிற்கும் போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பான் செய்)வீர்களாக; பிறகு, அவை தங்கள் பக்கங்களின் மீது சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்)த பின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், இரப்போருக்கும் உண்ணக் கொடுங்கள் – இவ்விதமாகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம்.” (அல்-குர்ஆன் 22:36)

மிக அதிகமான இறைச்சியை தர்மம் செய்யலாம் என்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது:

“…. பின்னர் மினாவிலுள்ள பலியிடும் இடத்திற்குச் சென்று, அறுபத்து மூன்று ஒட்டகங்களைத் தமது கையால் அறுத்துப் பலியிட்டார்கள். பிறகு எஞ்சிய ஒட்டகங்களை அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்(துப் பலியிடச் செய்)தார்கள். தமது பலி ஒட்டகங்களிலும் அலீ (ரலி) அவர்களை நபியவர்கள் கூட்டாக்கிக்கொண்டார்கள்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உத்தரவிட, அறுக்கப்பட்ட ஒவ்வோர் ஒட்டகத்திலிருந்தும் இறைச்சித் துண்டு ஒன்று கொண்டுவரப்பட்டு, ஒரு பாத்திரத்திலிட்டுச் சமைக்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அலீ (ரலி) அவர்களும் அதன் இறைச்சியை உண்டார்கள்; குழம்பைப் பருகினார்கள். “

(நீண்ட ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) வழியாக முஹம்மது பின் அலீ பின் அல் ஹுஸைன் (ரஹ்); ஆதாரம்: முஸ்லிம் 3137)

மேற்கண்ட ஹதீஸில், ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்கள் தங்களுடைய 100 ஒட்டகத்தின் குர்பானி இறைச்சியில் ஒவ்வொரு ஒட்டகத்தின் ஒரு துண்டை மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை மற்றவர்களுக்குப் பகிர்தளித்ததை விளங்க முடிகின்றது.

மேலும், குர்பானி கொடுப்பவர் தன்னுடைய குர்பானி பிராணியின் இறைச்சியை உண்பதுவும் நபிவழி என்பதை இந்த ஹதீஸ் உணர்த்துகின்றது.

குர்பானி இறைச்சியை பல நாட்களுக்கு சேமித்து வைக்கலாமா?

அப்துல்லாஹ் பின் அபீபக்ர் பின் முஹம்மத் பின் அம்ர் பின் ஹஸ்ம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் வாகித் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேலாக உண்பதற்குத் தடை விதித்துள்ளார்கள்” என்று கூறினார்கள். இதை நான் அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அம்ரா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அப்துல்லாஹ் பின் வாகித் சொன்னது உண்மையே. ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் கேட்டுள்ளேன்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் ஈதுல் அள்ஹா பெருநாள் சமயத்தில் கிராமப்புற ஏழை மக்களில் சிலர் (மதீனாவுக்கு) வந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), “(குர்பானி இறைச்சிகளை) மூன்று நாட்களுக்கு மட்டுமே சேமித்துவையுங்கள். பிறகு எஞ்சியதை தர்மம் செய்யுங்கள்” என்று கூறினார்கள். அதன் பின் (அடுத்த ஆண்டு) ஆனபோது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! மக்கள் தங்களது குர்பானிப் பிராணியி(ன் தோலி)லிருந்து தோல் பை தயாரித்துக் கொள்கின்றனர். அவற்றின் இறைச்சியிலிருந்து கொழுப்பை உருக்கி எடுத்துக்கொள்கின்றனர்” என்று கூறினர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதனால் என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “குர்பானிப் பிராணியின் இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேலாக உண்ண வேண்டாம் எனத் தாங்கள் தடை செய்தீர்களே?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(நம்மை நாடி) வந்திருந்த (ஏழை) மக்களுக்காகவே (மூன்று நாட்களுக்கு மேலாகக் குர்பானி இறைச்சியை உண்ண வேண்டாமென) உங்களைத் தடுத்தேன். இனி, நீங்கள் குர்பானி இறைச்சியை உண்ணுங்கள். சேமித்துவையுங்கள். தான தர்மமும் செய்யுங்கள்” என்று கூறினார்கள்.

ஆதாரம்: முஸ்லிம் 3986

சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (ஓர் ஆண்டில்) “உங்களில் குர்பானி கொடுத்தவர், மூன்று நாட்களுக்குப் பின் தமது வீட்டில் (குர்பானி இறைச்சியில்) எதையும் வைத்திருக்க வேண்டாம்” என்று கூறினார்கள். அடுத்த ஆண்டு வந்தபோது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! கடந்த ஆண்டில் நாங்கள் செய்ததைப் போன்றே இந்த ஆண்டும் செய்ய வேண்டுமா?” என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை (அவ்வாறு செய்ய வேண்டியதில்லை); அந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. (குர்பானி இறைச்சி மூலம்) பரவலாக மக்கள் அனைவரும் பயனடைய வேண்டும் என நான் விரும்பினேன் (எனவே, மூன்று நாட்களுக்கு மேல் உண்ணவேண்டாம் எனத் தடை விதித்தேன்)” என்று பதிலளித்தார்கள்.

ஆதாரம்: முஸ்லிம் 3992

பஞ்ச காலத்தின் போது மூன்று நாட்களுக்கு மேல் சேமிக்க கூடாது என்று விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, “இனி, நீங்கள் குர்பானி இறைச்சியை உண்ணுங்கள். சேமித்துவையுங்கள். தான தர்மமும் செய்யுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்திருப்பதால் நாமும் குர்பானி இறைச்சியை சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

அதேசமயம், “தான தர்மமும் செய்யுங்கள்” என்று அதே அனுமதியில் கூறப்பட்டிருப்பதால் பேராசையில் மிக அதிக அளவில் சேமித்துவிட்டு ஏழைகளுக்கு கொடுப்பதை பெருமளவில் குறைத்துவிடவும் கூடாது! நன்மையை நாடி செய்யப்படும் இந்தக் குர்பானியயின் மூலம் அதிகளவிற்கு ஏழைகளுக்கு வழங்கி அதிகளவு நன்மைகளைப் பெற நாம் முயற்சிக்க வேண்டும.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *